ராகுல் காந்தியின் பதவி பறிப்பு நியாயம் இல்லை


ராகுல் காந்தியின் பதவி பறிப்பு நியாயம் இல்லை
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:46 PM GMT)

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு நியாயம் இல்லை என்று கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கொடியேற்று விழா கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தவச்சேரி, ஆடூர் அகரம், குறிஞ்சிப்பாடி, வடலூர், சேராக்குப்பம், மீனாட்சி பேட்டை, அம்பலவாணன்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கொடியேற்றினார். இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட துணை தலைவர் ஏ.என்.ராமச்சந்திரன், மாவட்ட தலைவர்கள் திலகர், செந்தில்நாதன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வேல்முருகன், வட்டார தலைவர்கள் ராஜா, ஜனார்த்தனன், நகர தலைவர் வைத்தியநாதன், மாவட்ட பொறுப்பாளர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு நியாயம் இல்லை. ஜனநாயகம் இல்லை. பிரதமர் மோடி அரசு தவறு செய்து விட்டது. ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியதற்கு குஜராத்தில் தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றத்தில் நீதிபதியை மாற்றி, நீதியை வாங்கியுள்ளனர்.

மகாத்மா காந்தி எம்.எல்.ஏ., எம்.பி., கட்சி தலைவர் எந்த பதவியும் வகிக்கவில்லை. ஆனால் அவரிடம் லட்சிய பார்வை இருந்தது. அதே லட்சிய பார்வை ராகுல் காந்தியிடம் உள்ளது. அதனால் ராகுல்காந்திக்கு பதவி ஒரு பிரச்சினை கிடையாது. காங்கிரசார் ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து தெருமுனை பிரசாரம் செய்து மக்களுக்கு விளக்க வேண்டும். இன்று குறிஞ்சிப்பாடி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி 15 இடங்களில் பேசி உள்ளேன் .மீதி 85 இடங்களில் மாவட்ட தலைவர் தலைமையில் பிரசாரம் நடைபெறும். இவ்வாறு அவா் கூறினார்.


Next Story