பிரபல ரவுடி துரையை காவலில் எடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை


பிரபல ரவுடி துரையை காவலில் எடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை
x

திருச்சி ரவுடி கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி துரையை காவலில் எடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை

ரவுடி கொலை வழக்கு

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ரவுடி இளவரசன் (வயது 30). இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி புதுக்கோட்டையில் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது புதுக்குளம் அருகே மர்மகும்பல் இளவரசனை வெட்டி சாய்த்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மொத்தம் 9 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதில் 7 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை, தஞ்சாவூரை சேர்ந்த குஜிலி ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

திருச்சி மத்திய சிறையில் ரவுடி துரைக்கும், மற்றொரு ரவுடிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ரவுடி துரையை கொலை செய்ய இளவரசன் மூலம் ஒரு கும்பல் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த விவரம் ரவுடி துரைக்கு தெரியவரவே அவர் முந்திக்கொண்டு திட்டம் போட்டு தனது ஆட்கள் மூலம் இளவரசனை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைதானவர்கள் வாக்குமூலத்தில் இதனை தெரிவித்ததாக போலீசார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி திருச்சியில் ரவுடி துரையை வேறொரு வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்ற போது தப்பியோட முயற்சித்தவரை அங்குள்ள போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.

போலீஸ் காவலில் விசாரணை

இந்த நிலையில் இளவரசன் கொலை வழக்கில் துரையை கைது செய்ய கணேஷ் நகர் போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதில் அனுமதி கிடைத்த நிலையில் மதுரை சிறையில் இருந்த ரவுடி துரையை கணேஷ் நகர் போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை முடிந்ததும் நேற்று மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் மதுரை சிறையில் ரவுடி துரையை அடைத்தனர். ரவுடி இளவரசன் கொலை வழக்கில் மற்றொரு ரவுடியான தஞ்சாவூரை சேர்ந்த குஜிலி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story