பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 March 2023 6:45 PM GMT (Updated: 16 March 2023 6:45 PM GMT)

கடையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி ஊராட்சி இந்திராநகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் அம்பை - கடையம் பிரதான சாலையோரத்திலுள்ள அரசு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை சுமார் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குடிநீர் தொட்டியின் அருகே உள்ள தனியார் சுவரில் குடிநீர் தொட்டியின் ஸ்விட்ச் போர்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த சுவரின் உரிமையாளர், சுவிட் போர்டை உடைத்து விட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும் அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு சின்டெக்ஸ் தொட்டியை இடிக்காமல் தடுத்தனர். தொடா்ந்து இதனை கண்டித்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் தென்காசி - அம்பை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் அதே இடத்தில் குடிநீர் தொட்டி இருக்கும், எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story