கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
x

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 45-வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி மேலகல்கண்டார்கோட்டை தட்டான்குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ராட்சத குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மறியல்

மேலும் சாமிநாதன் நகர், மாருதி நகர், அர்ஜுனன் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 1,500 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், 11.5 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பதாகவும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை மீறுவதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வருவதால் 1,500 குடும்பங்களும் பாதிக்கப்படும் என்றும், இது சம்பந்தமாக இரண்டு மாதமாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, அப்பகுதி மக்கள் நேற்று திடீரென மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீண்டும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கூறியதை தொடர்ந்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story