சாலை-கழிவுநீர் வாய்க்கால் வேண்டி பொதுமக்கள் மறியல்


சாலை-கழிவுநீர் வாய்க்கால் வேண்டி பொதுமக்கள் மறியல்
x

சாலை-கழிவுநீர் வாய்க்கால் வேண்டி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் 2-வது வார்டு பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதிக்கு சாலை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை புதுவேட்டைக்குடி ஊராட்சி நிர்வாகத்தினர், மாவட்ட நிர்வாகம், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குன்னம் தாசில்தாரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திடீரென திட்டக்குடி-அரியலூர் செல்லும் மெயின் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நீண்ட நேரமாக அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்தும், சாலையிலே சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தவும் தொடங்கினர்.

இதையடுத்து வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் வசிக்கும் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக கழிநீர் வாய்க்கால் அமைத்து, புதிய சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் திட்டக்குடி-அரியலூர் சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story