செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:47 PM GMT)

திருமுல்லைவாசல் பகுதியில் செல்போன் ேகாபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடந்த சமாதான கூட்டமும் ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

சீர்காழி:

திருமுல்லைவாசல் பகுதியில் செல்போன் ேகாபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடந்த சமாதான கூட்டமும் ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரம்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் உள்ளது. இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமாதான கூட்டம் ஒத்திவைப்பு

இந்த நிலையில் நேற்று சீர்காழி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார். சீர்காழி சிறப்பு இன்ஸ்பெக்டர் சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், குடியிருப்பு வாசிகளை பாதிக்கும் வகையில் செல்போன் டவர் அமைக்க கூடாது. இதற்கு பதிலாக வேறு இடத்தில் பொது மக்களை பாதிக்காத வகையில் செல்போன் டவர் அமைக்க வேண்டும்.

தற்பொழுது செல்போன் டவர் அமைக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிவித்தனர். இதற்கு செல்போன் டவர் நிறுவன நிர்வாகிகள் முறையான ஆவணங்களை சமாதான கூட்டத்தில் தாக்கல் செய்யாததால் கூட்டத்தை வேறொரு தேதிக்கு துணை தாசில்தார் சாந்தி ஒத்தி வைத்தார். இந்த கூட்டத்தில் ஊர் நிர்வாகிகள் சார்ந்த மூர்த்தி ரகுராமன் தனியார் செல்போன் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story