3 மாதங்களுக்கு ஒருமுறை திட்ட குழு கூட்டம்


3 மாதங்களுக்கு ஒருமுறை திட்ட குழு கூட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2023 7:30 PM GMT (Updated: 20 Oct 2023 7:30 PM GMT)

மாவட்ட திட்டகுழு கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.

சிவகங்கை

திட்டக்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு தலைவர் பொன்.மணிபாஸ்கரன் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி செயலர் கந்தசாமி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொதுப்பற்றுடன் கூடிய அணுகுமுறைகளை உருவாக்குவது. அனைத்துப் பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிக்காக்க நடவடிக்க எடுப்பது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக இயற்கை வளம் மற்றும் மனித வளம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து தகவல் தளம் அமைப்பது.

3 மாதத்துக்கு ஒருமுறை

பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான உத்திகள், திட்டங்கள் ஆகிய பணிகள் தொடர்பான செயலாக்கத்தினை ஆய்வு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாகவும், இக்குழுவின் வாயிலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இக்குழு கூட்டமானது 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளின் நிலை நிதி ஆதாரங்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசிற்கு பரிந்துரைத்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், அனைத்து நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story