நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை


நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:47 PM GMT)

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

குடியரசு தினவிழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

பின்னர் திறந்த ஜீப்பில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று போலீசாரின் அணிவகுப்பை அவர் பார்வையிடுகிறார். விழாவில் மாவட்ட உயர் அதிகாரிகள், எம்.பி. எம்.எல். ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அணிவகுப்பு ஒத்திகை

இதற்கிடையே குடியரசு தினவிழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. குடியரசு தின விழாவில் போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு இடம் பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்புக்காக போலீசார் விழா நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சாம் தேவமாணிக்கம் மேற்பார்வையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.


Next Story