80 பேரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்ய வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்


80 பேரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்ய வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x

தமிழகத்தில் இதுவரை 80 பேரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

2-வது நாள் நடைபயணம்

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 3 நாள் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் தனது நடைபயணத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், காலை 2-வது நாள் பிரசார நடைபயணத்தை தர்மபுரி அருகே குரும்பட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜர் பாணி

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நான் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு சாதி, மதம், கட்சி ஆகியவற்றை கடந்து பொதுமக்கள் எழுச்சியுடன் கூடிய வரவேற்பு அளித்துள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் 18 லட்சம் மக்களில் 15 லட்சம் பேருக்கு பயன் கிடைக்கும். இதை முதன்மை திட்டமாக முன்னுரிமை அளித்து தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? என்று ஆய்வு செய்வதை தவிர்த்து காமராஜர் பாணியில் மக்கள் நலனுக்கான இந்த திட்டத்தை சாத்தியப்படுத்த வேண்டும். நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது பலரால் சாத்தியமில்லை என்று கூறப்பட்ட மத்திய தொகுப்பில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுத்தேன்.

80 பேர் தற்கொலை

வாக்குகளுக்காக வழங்கப்படும், வளர்ச்சியை ஏற்படுத்தாத இலவசங்களால் இந்தியாவிலேயே அதிக கடன் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசுக்கு ரூ.11 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதில் நேரடி கடன் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கோடி. ஒரு ஆண்டுக்கு கடனுக்கான வட்டி மட்டும் ரூ.97 ஆயிரம் கோடி. இந்த வட்டி தொகையை கொண்டே தமிழகத்தில் முக்கியமான 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஆன்லைன் ரம்மியால் இதுவரை தமிழகத்தில் 80 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story