அரூர் அருகே கோவில் நிலத்தில்ஆக்கிரமிப்பு அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


அரூர் அருகே கோவில் நிலத்தில்ஆக்கிரமிப்பு அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 31 July 2023 7:30 PM GMT (Updated: 31 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சில மாதங்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றகோரி அப்பகுதி மக்கள் வருவாய்துறையினருக்கு புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7.45 மணிக்கு அரூர்- தீர்த்தமலை சாலையில் வீரப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரூர் தாசில்தார் பெருமாள், இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 4-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story