குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

மேல் நங்கவரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

சாலை மறியல்

கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட மேல் நங்கவரம் காளியம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அப்பகுதியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மோட்டார் பழுதடைந்து கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

காவிரி குடிநீரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் பெட்டவாய்த்தலை- நங்கவரம் சாலையில் உள்ள மேல் நங்கவரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீசார், கவுன்சிலர்கள் வருவாய்த்துறை, பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story