குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர்

விருத்தாசலம்

மின்மோட்டார் பழுது

விருத்தாசலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு அருகில் உள்ள சாவடிகுப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டிமூலம் நகராட்சி நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதடைந்தால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் விருத்தாசலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த குடிநீர் சுத்தம், சுகாதாரம் இல்லாமல் இருந்தததாக தெரிகிறது.

சாலை மறியல்

எனவே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சித்தலூர் பகுதி மக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம்- கருவேப்பிலங்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காலையில் வேலைக்கு செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் ஏதுவாக வராமல், நேரம் கடந்து தரமில்லாத குடிநீர் வினியோகம் செய்வதால் நாங்கள் கடும் அவதி அடைகிறோம். எனவே குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story