கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி


கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
x

கள்ளக்குறிச்சி பகுதியில் பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.

கள்ளக்குறிச்சி

பட்டா வழங்கக்கோரி...

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பஞ்சமி நிலங்களை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த நிலத்தை மீட்டு, தலித் பெண்களுக்கு பட்டா வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அம்பேத்கர் பேரவை, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மற்றும் அம்பேத்கர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் அம்பேத்கர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தலித் பெண்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து உள்ளே செல்ல அனுமதிக்கும்படி, போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது எனவும், உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளியுங்கள், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story