திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:45 PM GMT)

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

தர்ப்பணம்

இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு விரதம் கடைபிடித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.


Next Story