இந்திய ரெயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் - காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா-எம்.பி.க்கள் பங்கேற்பு


இந்திய ரெயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக்அப்துல்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

மதுரை


இந்திய ரெயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக்அப்துல்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

நிலைக்குழு

இந்திய ரெயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களின் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இந்த குழுவில் மக்களவை சார்பில் குழுத்தலைவர் உள்பட 21 பேரும், மாநிலங்களவை சார்பில் 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பிரிவில் 8 பேர் மட்டும் உள்ளனர். ரெயில்வே நிலைக்குழுவானது, புதிய ரெயில் பாதைகள், அகலப்பாதை பணிகள், இரட்டை அகலப்பாதை பணிகள், மின்மயமாக்கல், சிக்னல், ரெயில்வேக்கு மிகவும் சவாலாக உள்ள திட்டங்கள், ரெயில்வே சொத்துக்கள் வளர்ச்சி ஆணையத்தின் பணிகள், விவசாயிகளுக்கான ரெயில் சேவை, ரெயில் இயக்க பாதுகாப்பு நடைமுறைகள், ரெயில் பெட்டி, என்ஜின் தயாரிப்பு, பணிமனை ஆகியவற்றின் பணிகள், பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு திட்டம், ரெயில்வேயின் துணை நிறுவனங்களின் சமூக அக்கறைக்கான வளர்ச்சித்திட்டம், இந்திய ரெயில்வேயை டிஜிட்டல் மயமாக்குவது, ரெயில்வே மண்டலங்களை பிரிப்பது, இணைப்பது, காலிப்பணியிடங்களை நிரப்புதல், அதிவேக ரெயில்களை அறிமுகம் செய்வது ஆகியன குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுரையில் நடந்த கூட்டமானது, நிலைக்குழு தலைவரும், முன்னாள் விவசாயத்துறை மந்திரி ராதாமோகன் சிங் தலைமையில் நடந்தது.

அகல ரெயில்பாதை பணி

அப்போது, தென்னக ரெயில்வேயின் புதிய ரெயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரெயில் பாதை பணிகள், இரட்டை அகலப்பாதை பணிகள், மின்மயமாக்கல் பணிகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்களான ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, எம்.பி.க்கள் கவுசலேந்திர குமார், சதாப்தி ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கவுசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற செயலக இயக்குனர் மாயா லிங்கி, தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மேலாளர் அனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த குழுவினர் ராமேசுவரம் சென்றனர். அங்கு புதிய பாம்பன் பால பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.


Next Story