ஆடி பெருக்கை முன்னிட்டு பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ஆடி பெருக்கை முன்னிட்டு  பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு  விவசாயிகள் மகிழ்ச்சி
x

ஆடி பெருக்கை முன்னிட்டு பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஆடி பெருக்கை முன்னிட்டு பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழைத்தார்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் ஆடி பெருக்கை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனையானது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 800 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்துக்கு 2 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story