சீனிவாசபெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்


சீனிவாசபெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
x

சீனிவாசபெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர்

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் ேகாவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி கல்கருட சேவை நடக்கிறது.

பங்குனி திருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவத்தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று உற்சவர் பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருட சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கல்கருட சேவை

இக்கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை தொடர்ந்து நேற்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி மாலை 6 மணிக்கு பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடக்கிறது. இரவு கல்கருட பகவான் அலங்கார தரிசனம் நடக்கிறது. 6-ந்தேதி உற்சவர் பெருமாள் தாயார் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story