சத்துணவு மையங்களில் உணவின் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு


சத்துணவு மையங்களில் உணவின் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு
x

சத்துணவு மையங்களில் உணவின் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

கரூர்

கண்காணிப்புக்குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். காலை உணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

உணவு பொருட்களின் தரம், உணவு சுவையாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சமையல் தொடங்கும் நேரம், முடிக்கப்பட்ட நேரம், பரிமாறப்பட்ட நேரம், உணவு வழங்கப்பட்ட விவரங்களை செயலியில் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

உணவின் தரம் ஆய்வு

மேலும், மாணவர்களின் வருகை, சமையல் பொறுப்பாளர்கள், தளவாட பொருட்கள், உணவு பொருட்கள் இருப்பு விவரம், வரவு செலவு விவரங்கள்,ஆகியவற்றை சிறப்பு பார்வை யாளர் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது செயல்பாடுகள் குறித்த குறிப்பேடுகளை பதிவேடுகளில் பதிவிட்டு இருக்க வேண்டும்.

காலை உணவு திட்டம், சத்துணவு மையங்களில் எரிவாயு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காலை உணவு திட்டம் மையம், சத்துணவு மையங்களில் உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story