ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது -அமைச்சர் ரகுபதி


ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது -அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 9 March 2023 1:27 PM GMT (Updated: 9 March 2023 1:44 PM GMT)

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடியது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது.

மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சட்டத்துறை அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை மாநில அரசு தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருப்பது ஏற்புடையது அல்ல.

சட்டம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதால், சட்டப்பேரவையில் சட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும். சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றமே கூறியுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டிற்கு செல்ல தேவையில்லை.

2-வது முறை அனுப்பும் மசோதாவை கவர்னர் கிடப்பில் போட்டால், அது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் தமிழக அரசுக்கு எவ்வித வருவாயும் வரவில்லை. மக்களின் நலனுக்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.


Next Story