செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் என்.எஸ்.பி. சாலையில் பெரியார் சிலை அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வினோத்(வயது 28). இவர் செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர், தனது நண்பர் சுப்ரமணிய பாரதியார் தெருவைச்சேர்ந்த காஞ்சன் என்ற கார்த்திக்(25) என்பவருடன், நிர்மலா நகரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது. மேலும் கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த வழக்கில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையை சேர்ந்த மணிகண்டன் (21), எளம்பலூர் சிபிராஜ் (19), வடக்குமாதவி ஏரிக்கரை பகுதியைச்சேர்ந்த வெங்கடேஷ் (21), பெரம்பலூர் கம்பன் தெருவைச்சேர்ந்த பூவாயி என்ற பூவரசன் (21) மற்றும் எளம்பலூர் சாலையைச்சேர்ந்த பப்லு என்ற சத்தியமூர்த்தி (24) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய நபரான பெரம்பலூர் மல்லிகை நகரைச்சேர்ந்த அபிஷேக்கை (20) நேற்று பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story