வைணவ கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா.. தமிழக அரசு ஏற்பாடு!


வைணவ கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா.. தமிழக அரசு ஏற்பாடு!
x

புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலா பேருந்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா பேருந்தை சென்னை சேப்பாக்கத்தில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

"புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு சுற்றுலாவாக" ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், மாமல்லபுரம் சயன பெருமாள் கோயில், சிங்க பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர் மலை நீர் வண்ண பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப் படுகின்றனர்.

மேலும் 2வது திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், திருநீர் மலை நீர் வண்ண பெருமாள் கோயில், திருமுல்லை வாயில், பொன் சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றிற்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், இத்திட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தகவல் தெரிவித்தார்.


Next Story