திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி தாக்கு
திமுக அரசிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது
கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:
●செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.
●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
இனி இந்த திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்துவதில் எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.