காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றம் இல்லை - மேலிட பொறுப்பாளர் தகவல்


காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றம் இல்லை - மேலிட பொறுப்பாளர் தகவல்
x

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி தற்போதைக்கு மாற்றப்படவில்லை என்று மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். அவர் தலைவராக பதவியேற்ற உடன் சந்தித்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை தவிர்த்து எஞ்சிய 38 தொகுதிகளையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இந்த நிலையில், 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் போதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்று வதந்திகள் பரவின.

ஆனால், சட்டமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சந்தித்தது. இந்த தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீண்டும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி, அதற்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற கேஷியங்கள் எழும்பின.

கடந்த சில வாரங்களுக்கு முன், இதோ கே.எஸ்.அழகிரி மாற்றப்படப்போகிறார். புதிய தலைவராக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை அறிவிக்கப்படுவார் என்று யூகிக்கப்பட்டு செய்திகள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி தலைமையிலான நிர்வாகிகள் சிலர் பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர்.

இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற வதந்திகளுக்கும், செய்திகளுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது கும்பகோணத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் கலந்து கொண்ட தினேஷ் குண்டுராவ், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில்தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலை சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

தினேஷ் குண்டுராவின் கருத்து மூலம் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பதும், வேறு யாரும் தற்போதைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக முடியாது என்பதும் தெளிவாகி உள்ளது.


Next Story