என்.எல்.சி. விவகாரத்தில் சென்னையில் 'வீராவேசம்' டெல்லியில் அமைதி: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் கண்டனம்


என்.எல்.சி. விவகாரத்தில் சென்னையில் வீராவேசம் டெல்லியில் அமைதி: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் கண்டனம்
x

என்.எல்.சி. விவகாரத்தில் சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் அமைதியாக இருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

"என்.எல்.சி. விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.

ஆனால் அன்புமணி ராமதாஸ் போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி, பொது சொத்துகளை வழக்கம்போல் சேதப்படுத்தி, அமைதியாக இருக்கும் உழவர்களை-மக்களை தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி வருகிறார். ஒரிடத்தில் "மண்ணையும், மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்" எனவும், இன்னொரு இடத்தில், "நாங்கள் டெல்லி அளவில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை" என்றும் நாடகமாடுவது என்பதை கைவந்த கலையாக செய்து வருகிறார்.

சென்னையில் 'வீராவேசம்' செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ள மருத்துவ கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப்போகிறது என்ற கலக்கமா?

டெல்லியில் அமைதி

இங்கே "மண்ணையும், மக்களையும் காப்போம்" என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, "என்.எல்.சி விரிவாக்க திட்டத்தை கைவிட மாட்டோம்" என்று மத்திய பா.ஜ.க. மந்திரி, அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணியின் மந்திரி அறிவித்த பிறகும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப்பாம்பு போல் அடங்கி இருப்பது ஏன்?

சென்னையில் பேசுவதும்-போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அதிகபட்சமாக "இனி நாங்கள் டெல்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை" என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறி சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?

அப்படியெல்லாம் அன்புமணி ராமதாஸ் அவசரப்பட மாட்டார் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் அப்படி அவசரப்பட்டால் மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக்கதவை தட்டும் என்பது அவருக்கு தெரியும்.

அதனால்தான் மத்திய மந்திரி கைவிரித்தும் இவரால் அதுபற்றி கைதூக்கி கேள்வி எழுப்ப முடியாமல் அமைதியாகி விட்டார்.

எனவே, வட மாவட்ட மக்களை-உங்களின் இதுபோன்ற 'கபட நாடகங்கள்' மூலம் திசைதிருப்பி விட முடியாது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story