மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது: திமுக அறிவிப்பு


மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது: திமுக அறிவிப்பு
x

இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது" தஞ்சை எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது.

சென்னை,

திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டு முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது வழங்க உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. முன்னாள் எம்.பி. தஞ்சை எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு இந்தாண்டு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கழகம் காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை தலைவர் கலைஞர் அவர்கள் 1985-ம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதுகள் கழகக் காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018-ம் ஆண்டு முதல் இனமானப் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75-வது ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது. இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது" தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story