பா.ஜனதா நிர்வாகி வீட்டில் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட ஜே.பி.நட்டா


பா.ஜனதா நிர்வாகி வீட்டில் தரையில்   அமர்ந்து உணவு சாப்பிட்ட ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

பிள்ளையார்பட்டி கோவிலில் சாமி தரிசனம் செய்த பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் நிர்வாகி வீட்டுக்குச்சென்று தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

பிள்ளையார்பட்டி கோவிலில் சாமி தரிசனம் செய்த பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் நிர்வாகி வீட்டுக்குச்சென்று தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

பிள்ளையார்பட்டியில் தரிசனம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். காரைக்குடியில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கானாடுகாத்தான் பகுதியில் உள்ள பங்களாவில் நேற்று முன்தினம் இரவில் தங்கிய ஜே.பி.நட்டா நேற்று 2-வது நாளாக சிவகங்கை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

நேற்று காலை 10 மணி அளவில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்றார். பிச்சைக்குருக்கள் தலைமையில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது..

பின்னர் மூலவர் கற்பகவிநாயகரை தரிசனம் செய்த நட்டாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

தரையில் அமர்ந்து சாப்பிட்டார்

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அவர் காரைக்குடி அருகே நெசவாளர் காலனியில் உள்ள பா.ஜனதாவை சேர்ந்த சாக்கோட்டை தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராமலிங்கம் வீட்டில் காலை உணவு சாப்பிட சென்றார். அங்கு மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். அனைவரும் ஒன்றிய மண்டல தலைவர் ராமலிங்கத்துடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டனர்.

இட்லி, பூரி, வடை

இட்லி, பூரி, வடை, கேசரி, இனிப்பு வெள்ளையப்பம் ஆகியவை ஜே.பி.நட்டாவுக்கு பரிமாறப்பட்டன. அவற்றை ஆர்வமுடன் சாப்பிட்டார். பின்னர் டீ பருகினார்.

சற்று நேரம் அங்கு நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, பின்னர் காரைக்குடியில் ஒரு மகாலில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மருதுபாண்டியர்நினைவிடத்தில் மரியாதை

மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து மதுரைக்கு காரில் புறப்பட்ட அவர், வழியில் திருப்பத்தூரில் இறங்கி, மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று அங்குள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் மதுரைக்கு புறப்பட்டு வந்தார். முன்னதாக திருப்பத்தூர் அகமுடையர் உறவின்முறை சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஜே.பி.நட்டாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது வக்கீல்கள் முருகேசன், வேதநாராயணன், கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் சேதுசிவராமன், ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story