மோட்டார் சைக்கிள்- மொபட் திருட்டு; 4 பேர் கைது


தினத்தந்தி 9 April 2023 6:45 PM GMT (Updated: 9 April 2023 6:45 PM GMT)

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள், மொபட் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள், மொபட் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருட்டு

களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் மதன் ஸ்டாலின் (வயது 45). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார்சைக்கிளில் பத்மநேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அவரது நண்பரான கேசவநேரியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் மொபட்டில் வந்தார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிள், மொபட்டை நிறுத்தி விட்டு, சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள், மொபட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மதன் ஸ்டாலின் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

மோட்டார் சைக்கிள், மொபட்டை திருடியது கீழதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை மகன்கள் முப்பிடாதி (23), இசக்கிபாண்டி (22) மற்றும் கல்லிடைகுறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்த பிச்சையா மகன் மாடசாமி என்ற மகேஷ் (37), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பலவேசதேவர் மகன் சங்கரலிங்கம் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story