தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல், கஞ்சா வியாபாரி, மனைவியுடன் கைது


தினத்தந்தி 4 Dec 2022 5:33 PM GMT (Updated: 5 Dec 2022 5:37 AM GMT)

ஆற்காட்டில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கஞ்சா வியாபாரி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பகுடு என்கிற பாஸ்கர் (வயது 32), கஞ்சா வியாபாரி. இவரது மனைவி துர்கா (28).

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது 17 வயது மகளுடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காட்டில் குடியேறினார். இவர் அங்குள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.

பாஸ்கர் அந்த பெண்ணிடம் வலிய சென்று பேச்சு கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தப் பெண் அதனை கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக பாஸ்கரின் மனைவி துர்காவுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் பாஸ்கர் அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி துர்காவுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். கதவைத் திறந்த அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பாஸ்கர், கதவை பூட்டிக்கொண்டு, அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

மனைவியுடன் கைது

இது குறித்து அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கர் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகிய 2 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story