வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து - அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு


வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து - அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Jun 2023 7:36 AM GMT (Updated: 22 Jun 2023 9:02 AM GMT)

வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

வடலூரில் இன்று நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 10 ஆயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன், அப்போது வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம் என்று கூறினார்.

இந்த நிலையில், வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், "தா்ம ரட்சராகப்" புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு கவர்னர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் "தனிப்பெருங் கருணை" ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே கவர்னர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் கவர்னரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story