மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: தீபாவளி புத்தாைட வாங்கி சென்ற என்ஜினீயரிங் மாணவர் பலி


மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: தீபாவளி புத்தாைட வாங்கி சென்ற என்ஜினீயரிங் மாணவர் பலி
x

நெல்லை அருகே ேமாட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில், தீபாவளி புத்தாடை வாங்கி சென்ற என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் பேக்கரி ஊழியர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே ேமாட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில், தீபாவளி புத்தாடை வாங்கி சென்ற என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் பேக்கரி ஊழியர் பலியானார்.

தீபாவளிக்கு புத்தாடை...

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே தெற்கு அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 21). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் தமிழரசன் (17), கணேசன் மகன் தமிழ் செல்வன் (17). இவர்கள் 2 பேரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்கினர். பின்னர் அவர்கள் தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

முன்னீர்பள்ளத்தை அடுத்த ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் உள்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு விபத்து

பாளையங்கோட்டை கோட்டூர் செந்தில்நகரைச் சேர்ந்தவர் தங்கமுத்து (30). இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கான குடோன் பொன்னாக்குடியை அடுத்த பேரின்பபுரம் விலக்கில் உள்ளது. அங்கு இரவு பணியில் இருந்த தங்கமுத்து நேற்று அதிகாலையில டீ குடிப்பதற்காக 4 வழிச்சாலைக்கு சென்றார்.

அப்போது கன்னியாகுமரி நோக்கி சென்ற வாகனம் திடீரென்று தங்கமுத்துவின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து சென்று, தங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகள் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story