செங்கல்பட்டு அருகே கொத்தனார் அடித்துக்கொலை


செங்கல்பட்டு அருகே கொத்தனார் அடித்துக்கொலை
x

செங்கல்பட்டு அருகே கொத்தனார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

மது வாங்கி தருமாறு தொல்லை

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது கேட்டு தொந்தரவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதியன்று ராட்டிணங்கிணறு மதுக்கடை அருகே வினோத் குமார் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), தங்கராஜ் (37), ஷான் (40) மற்றும் திருமணியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (48) ஆகியோரிடம் மது வாங்கி தருமாறு கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அருகில் இருந்த கட்டையை எடுத்து வினோத்குமாரின் தலையில் அடித்துள்ளனர். அதில் வினோத் குமார் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் வினோத்மாரை தூக்கி சென்று மது போதையில் கீழே விழுந்து கிடந்ததாக கூறி அவரது வீட்டில் படுக்க வைத்து விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி வரை வினோத்குமார் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நண்பர்கள் கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் வினோத்குமாரின் நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மது வாங்கி தரக்கூறி தொந்தரவு செய்த நபரை நண்பர்களே அடித்துக்கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story