மஞ்சுவிரட்டில் காளை முட்டி தொழிலாளி பலி


மஞ்சுவிரட்டில் காளை முட்டி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:46 PM GMT)

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில் தொழிலாளி பலியானார். மேலும் 26 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில் தொழிலாளி பலியானார். மேலும் 26 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியை அடுத்த கீழபூங்குடி கிராமத்தில் ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அக்கம்பக்கத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.திடலில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது காளைகள் மைதானத்தில் ஆக்ரோஷமாக துள்ளிக்குதித்து ஓடின. அவ்வாறு ஓடிய காளைகளை அங்கு திரண்டிருந்த இளைஞர்களும், மாடுபிடி வீரர்களும் போட்டி, போட்டு அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றன.

தொழிலாளி சாவு

இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். சிவகங்கை மாவட்டம் மாம்பட்டியை அடுத்த கச்சப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மோகனம்(வயது 37) என்பவரும் வந்திருந்தார்.

மைதானத்தில் ஆக்ரோஷமாக ஓடி வந்த காளை ஒன்று, எதிர்பாராதவிதமாக மோகனத்தை முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காைளகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர். அதில் 5 பேர் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story