மஞ்சுவிரட்டு


மஞ்சுவிரட்டு
x

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே‌ அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.‌ கல்யாண்குமார் வீரர்களுடன் உறுதிமொழி ஏற்று தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மதுரை, ‌ சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட‌ பல்வேறு பகுதிகளில் இருந்து 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு ஒரு குழுவாக மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் 3 மாற்று வீரர்கள்‌ என‌ மொத்தம் 12 பேர் வீதம், 10 குழுவில் 120 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த காளையர்கள் காளையை பிடிக்க வேண்டும். அப்படி காளைகளை பிடிக்கவில்லை என்றால் காளையே போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காளைகளை சில குழுவினர் போட்டி போட்டு பிடித்தனர். இதில் வெற்றி பெறும் குழுவினருக்கு ரொக்கபணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மாடு பிடி வீரர்களும், காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதையொட்டி மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு மணிவண்ணன், திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் 400-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விழா நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரில் பார்வையிட்டார். இதில், திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story