ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம், முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தல்


ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம், முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தல்
x

ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம், முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் இந்து உரிமை மீட்பு பிரசார பயணக்கூட்டம், மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் மனோகர் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ராஜா, விநாயகர் துதி பாடல் பாடினார். மாநில துணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பேசினர். இதில் இந்து உரிமை மீட்பு பிரசார பயணம் மேற்கொண்டு ஜெயங்கொண்டத்திற்கு வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.

அவர் பேசுகையில், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன், பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி, ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு ஏரி, குளங்களை வெட்டியதுடன், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி மிகத் திறமையாக ஆட்சி செய்தார். எனவே மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபமும், முழு உருவ சிலையும் அமைக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் பேரூர் ஆதீனத்துடைய சோழமண்டல தம்புரான் சிவப்பிரகாச அடிகளார், மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமுருகன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபமும், முழு உருவ சிலையும் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசிய க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வுக்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நன்றி தெரிவித்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சபரிராஜன் நன்றி கூறினார்.


Next Story