தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது


தினத்தந்தி 15 May 2023 6:45 PM GMT (Updated: 15 May 2023 6:47 PM GMT)

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 25லிட்டர் சாராயம் மற்றும் ஊரலை பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசார் சோதனை

சாத்தான்குளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரேஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது சடையன்கிணறு விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் சடையன்கிணறு பால் மகன் சின்னத்துரை (வயது 46) என தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தினர்.

சாராயம் பறிமுதல்

அதில் 200 மி.மி அளவு கொண்ட 5 பாட்டில்களில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சடையன்கிணறு - வடலிவிளை செல்லும் வழியில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் சாராயம் காய்ச்சி விற்று வந்ததை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் அந்த தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

கைது

அங்கு அவர் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய ஈயசட்டி, 15 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊரல், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர்.


Next Story