மதுரை மாணவன் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை கடிதம் சிக்கியது


மதுரை மாணவன் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை கடிதம் சிக்கியது
x

குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியுள்ளது.

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி ராஜலட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்தநிலையில், 11-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி ஆகியோரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்தி சென்றன. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து மாணவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ,2 கோடி தர வேண்டும் என மிரட்டினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவன், ஆட்டோ டிரைவரை கடத்தியது முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் (45) என்பது தெரியவந்தது. போடியில் தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர். செந்தில்குமார் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

செந்தில்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தில் கூட்டாளிகளாக செயல்பட்ட தென்காசியை சேர்ந்த வீரமணி (30) மற்றும் காளிராஜ் (36), நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் (38) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரியின் மனைவி சூர்யா (35), மதுரையை சேர்ந்த மகாராஜா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

சூர்யா, மகாராஜா ஆகியோரை பிடிக்க 4 தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில் குஜராத்தில் சூர்யா தங்கியிருந்தபோது, தற்கொலை செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் சூர்யா தற்கொலை குறித்து போலீஸார் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் சிறுவன் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை ராஜலட்சுமி இந்த விவகாரத்தில் ஏன் தொடர்புபடுத்தினார் என தெரியவில்லை. இது குறித்து முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story