தமிழிசை பயணித்த விமானத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம்:தூத்துக்குடி இளம்பெண் லூயிஸ் சோபியா மீதான வழக்கு ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழிசை பயணித்த விமானத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம்:தூத்துக்குடி இளம்பெண் லூயிஸ் சோபியா மீதான வழக்கு ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழிசை பயணித்த விமானத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி இளம்பெண் லூயிஸ் சோபியா மீதான வழக்கு ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா என்ற இளம்பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை, தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தார். தூத்துக்குடியில் விமானத்தில் இருந்து இறங்கியபோது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன்.

இதனால் கோபம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே லூயிஸ் சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

மேலும் தற்போதைய தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரி மனுதாக்கல் செய்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் மீதான புகாரில், சென்னை பெருநகர், மதுரை, கோவை நகர் பகுதிகளில் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சட்டப்பிரிவின்கீழ் மனுதாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி போலீசாருக்கு இந்த பிரிவில் வழக்குபதிவு செய்ய அதிகாரம் இல்லை. மேலும் இதற்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அனுமதியும் பெறவில்லை. எனவே மனுதாரர் மீதான வழக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் லூயிஸ் சோபியா மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story