வெண்ணந்தூர் பகுதியில்பொதுமக்களை பாதித்து வரும் மெட்ராஸ் ஐ நோய்


வெண்ணந்தூர் பகுதியில்பொதுமக்களை பாதித்து வரும் மெட்ராஸ் ஐ நோய்
x
தினத்தந்தி 25 Sep 2023 7:00 PM GMT (Updated: 25 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

சென்னை பகுதியில் பொதுமக்களின் கண்களை பாதிக்கும் மெட்ராஸ் ஐ நோயானது அதிகளவில் பரவியது. இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நோய் பரவி வருகிறது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டி கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அறிகுறி உள்ளவர்கள் மற்றும் மெட்ராஸ் ஐ நோயினால் பாதித்தவர்கள் உடனடியாக டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, மெட்ராஸ் ஐ நோயால் பாதித்தவர்கள் தனியாக கைகுட்டை வைத்து கண்ணில் இருந்து வடியும் நீரை துடைக்க வேண்டும். கண்களை விரல்களால் அழுத்த கூடாது. வெளியில் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.


Next Story