பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள கடன் மேளா


பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள கடன் மேளா
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், சீர்மர பினரின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திக் கொள்ள கடன் மேளா குரும்பலூரில் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

கடன் திட்டத்தின் கீழ் நிதியுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பொது கால கடன், தனிநபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுகடன், கறவை மாட்டு கடன் போன்ற பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தாலுகா வாாியாக நடக்கிறது

நடப்பு நிதி ஆண்டிற்கு மேற்படி டாம்கோ-டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டம் குறித்து லோன் மேளா பெரம்பலூர் மாவட்டத்தில், தாலுகா வாரியாக நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் தாலுகாவிற்கு நாளை (திங்கட்கிழமை) குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொண்டமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும் லோன் மேளா நடக்கிறது. குன்னம் தாலுகாவிற்கு வருகிற 28-ந்தேதி திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு 30-ந்தேதி டி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும் லோன் மேளா நடைபெற உள்ளது.

ஆண்டு வருமானம்

கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். டாம்கோ கடன் பெற ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் இருத்தல் வேண்டும். டாப்செட்கோ கடன் பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். லோன் மேளா நடைபெறும் நாளில் சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, திட்ட அறிக்கை (தொழில் செய்வதற்கு) போன்ற ஆவணங்களை எடுத்து வர வேண்டும். மேற்படி லோன் மேளாவில் கலந்து கொண்டு டாம்கோ-டாப்செட்கோ கடன் திட்டங்களில் கடன் உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story