பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் சாராயம் பறிமுதல்


பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:46 PM GMT)

சீர்காழி அருகே பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:


சீர்காழி அருகே பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சாராயம் பதுக்கல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது55). இவருடைய மனைவி லட்சுமி (48). இவருடைய வீட்டின் பின் பகுதியில் தடை செய்யப்பட்ட சாராயம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, நுண்ணறிவு பிரிவு காவலர் திவாகர், எழுத்தர் அமல்ராஜ் உள்ளிட்ட குழுவினர் திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள லட்சுமி வீட்டின் பின் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

கணவன்- மனைவி கைது

அப்போது மரங்களுக்கு இடையே மண்ணில் சாராய கேன் மற்றும் பாக்கெட்டுகள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மண்ணில் புதைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 23 சாராய கேன்களையும், 100 மி.லி. அளவுள்ள 1,125 சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லட்சுமி, அவருடைய கணவர் மாறன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சீர்காழி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story