மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
x

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது.

ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 100 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, தற்போதுள்ள நடைமுறையே தொடரும். பல மின் இணைப்புகளை ஒரே ஆதாரில் இணைத்துக்கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story