சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமியுடன் பழக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவருடைய மகன் முரளி(வயது 34). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வரை 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

இந்த விவகாரம் தெரிந்தவுடன் முரளியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். அதன்பிறகு அந்த சிறுமியுடன் பழகுவதை முரளி தவிர்த்து வந்தார்.

வாலிபர் கைது

சில மாதங்களில் அந்த சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது. இதற்கு காரணமான முரளியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கூறியபோது, இதற்கு தான் காரணம் இல்லை என்று கூறியதுடன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.

இது குறித்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார். அதன்பேரில் அப்போதைய பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தார்.

ஆயுள் தண்டனை

பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தற்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் ஆகியோர் தொடர்ந்து நடத்தினர்.

இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து முரளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு நடந்தபோதே அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story