'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்


சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்
x

சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ‘‘சத்தம் போட்டே குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை’’ என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

அரியலூர்

கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாக செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள். சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

7 ஆண்டுகள் சிறை

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் வசிக்கும் ஐகோர்ட்டு வக்கீல் சுப்பிரமணியன்:- சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்களில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டங்களில் இரு வகைகளிலும் சைபர் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை பெற்று தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது உள்ள நிலையில் சைபர் குற்றம் மூலம் பொருளாதாரம் சார்ந்த தவறுகள் நடைபெற்றாலும் உடனடியாக அவர்களுடைய பணத்தை மீட்டு தருவதற்கான அனைத்து வழி வகைகளும் சட்டபூர்வமாக உள்ளன. அதுபோல் இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவது, முகம் மாற்றம் செய்யப்பட்ட ஆபாச படங்களை வெளியிடுவது, மைனர் பெண் அல்லது ஆணின் பெயர் அல்லது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிடுவது உள்ளிட்டவை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் கடுமையான குற்றங்களாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. ஆபாச படங்கள் வெளியிடுவது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 முதல் 5 லட்சம் வரை வழங்கப்பட்டு அத்தொகை குற்றவாளிகளின் சொத்தின் மூலம் ஈடு செய்யப்படும். அதுபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கான கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. எனவே சைபர் குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக தயக்கமில்லாமல் போலீசாரை அணுகி புகார் அளிப்பதுடன், சரியான வக்கீல்களை நாடி அவர்களுக்கான சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

ஓ.டி.பி.யை பகிரக்கூடாது

அரியலூர் மாவட்ட கூடுதல் இணைய குற்ற போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர்:- பொதுமக்கள் தங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைத்து தருகிறோம். அதிகளவு வாடகை தருகிறோம். முன்பணம் செலுத்துங்கள் என்று கூறுவதை நம்பி ஏமாறக்கூடாது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர் பெயரில் பணம் கேட்டால் கொடுத்து ஏமாறக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயிலில் இருந்து வரும் லாட்டரி பரிசு பொருள், குறைந்த விலைக்கு பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது. செல்போன் மற்றும் சிம் கார்டு ஆகியவை தொலைந்து விட்டால் சிம் கார்டை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்ளும் போது நம்பிக்கையான வலைதளங்களில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். ஓ.டி.பி. நம்பரை பகிரக்கூடாது. பாதுகாப்பற்ற முறையில் எந்த ஒரு லிங்கையும் தொடக்கூடாது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும்போது கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

ரூ.2¼ லட்சம் மோசடி

பாதிக்கப்பட்ட செந்துறையை சேர்ந்த முருகன்:- எனக்கு சிங்கப்பூரில் எலக்ட்ரிஷன் வேலை 3,500 டாலர் சம்பளம் வாங்கி தருவதாக கூறி ரூ.2¼ லட்சம் மர்ம ஆசாமிகள் மோசடி செய்தனர். பின்னர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் மர்ம ஆசாமிகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்ைத போலீசார் 'ப்ரீஸ்' செய்துள்ளனர். கோர்ட்டு மூலம் இத்தொகை விரைவில் எனக்கு கிடைத்து விடும். எனவே பொதுமக்கள் மர்ம ஆசாமிகளின் ஆசைவார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

டேட்டா கார்னர்

அரியலூர் மாவட்டத்தில் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 131 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டில் 215 வழக்குகள் இதுவரை பதிவாகி உள்ளன. இதில் 122 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது.


Next Story