மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு தயாரிக்கும் இடத்தை மாற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு தயாரிக்கும் இடத்தை  மாற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

திருஞானசம்பந்தர் மண்டபம்

மதுரை ஆதீன மடம் சார்பாக அதன் மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் மண்டபத்தில் ஆதீனத்தின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள், ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனி மாத உற்சவத்தின் 6-ம் நாள் மண்டகப்படியில், இங்கிருந்துதான் அம்மன் புறப்பட்டு வீதி உலா நடைபெறும். அப்போது திருஞானசம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்து பக்தர்களுக்கு வரலாறு கூறும் நிகழ்வு நடைபெற்று வந்தது.

ஆனால், 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த காலத்தில் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, இந்த மண்டபம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய ஆதீனம் ஞானசம்பந்த தேசிகர், இந்த மண்டபத்தில் மீண்டும் தேவார பாடசாலை, 6-ம் மண்டகப்படி உற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். எனவே, லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அறிக்கை தாக்கல்

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சொல்வது போல இந்த மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும், தேவார வகுப்பும் நடக்கவில்லை என்பதால் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 1939, 1963, 1985-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கோவில் வரலாறு, மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் மனுதாரர் தரப்பில் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. அந்த புத்தகங்களில் திருஞானசம்பந்தர் மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன என்று அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

இடமாற்றம் செய்ய வேண்டும்

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர் என்பதால் அனைவரும் தேவாரம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே லட்டு தயார் செய்யும் பணியை வேறு இடத்துக்கு 4 மாதத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும். அந்த மண்டபத்தில் பாடசாலை நடத்த ஆதீனத்துக்கு இடமளிக்க வேண்டும். முன்புபோல, இங்கு ஆனி மாத திருவிழாவின் 6-ம் நாள் மண்டகப்படி அமைத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story