முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மூங்கில்துறைப்பட்டில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், முதலாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 2-ம் கால யாக சாலை, கோபூஜை, நாடி சந்தானம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து 10 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வரசக்தி விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

சிறப்பு பூஜை

அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story