திட்டக்குடி அருகே அண்ணியை கத்தியால் குத்தி கொன்ற கொழுந்தன்


திட்டக்குடி அருகே அண்ணியை கத்தியால் குத்தி கொன்ற கொழுந்தன்
x

திட்டக்குடி அருகே அண்ணியை கத்தியால் குத்தி கொன்ற கொழுந்தன், போலீசில் சரணடைந்தார்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பட்டத்தாள். இவர்களுக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், காசிநாதன் ஆகிய 4 மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதில் வெங்கடேசனும்(வயது 38). செஞ்சியை சேர்ந்த பிரேமலதாவும்(25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

கத்திக்குத்து

வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் தம்பியான காசிநாதன் அங்கு வந்தார். திடீரென அவர் கத்தியால் பிரேமலதாவை குத்தினார்.

இதில் படுகாயமடைந்த அவர், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கத்திக்குத்து காயங்களுடன் பிரேமலதா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே பிரமலாதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காரணம் என்ன?

இது பற்றி அறிந்ததும் ராமநத்தம் போலீசார், பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் காசிநாதன் சரண் அடைந்தார். சொத்து தகராறு காரணமாக பிரேமலதாவை காசிநாதன் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் காசிநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story