அனைத்து நலத்திட்டங்கள் மானியங்கள் பெற கட்டாயம் என அறிவிப்பு; ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?


அனைத்து நலத்திட்டங்கள் மானியங்கள் பெற கட்டாயம் என அறிவிப்பு; ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?

ஈரோடு

ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, படிப்பு முதல் வேலை வரை, எங்கும், எதற்கும், எதிலும் ஆதார்? என்ற நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டு வருகிறது.

ஆதார் அறிமுகம்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை மத்திய அரசுக்கு உணர்த்தியது.

அப்போதுதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கை விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்துக்கு உதித்தது.

அதற்காக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது.

140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இதுவரையில் 131 கோடி பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது.

எதிர்ப்புக் கிளம்பியது

தனி நபர் அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் ஆனாலும் நாளடைவில் மத்திய அரசின் மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கும் அது அவசியம் என்று ஆணைகள் வந்தன.

ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முக்கிய விவாத பொருளாகவும் மாறியது. நீதிமன்றங்கள் வரை வழக்குகளும் சென்றன. இறுதியில் ஆதாரே வென்றது.

அதையடுத்து வருமான வரி செலுத்துவதற்கான பான் எண் (நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை, வருங்கால வைப்பு நிதி எண் போன்ற அனைத்திலும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டது.

ஆயுதமானது

வங்கிகள் மூலம் சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆனவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 445 கோடி மானியத் தொகை மிச்சம் ஆனது.

ரெயிலில் 'டிக்கெட்' முன்பதிவு செய்ய தனி நபருக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கிலும் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆனவுடன் போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டன. இது போன்று மத்திய அரசின் மானியங்கள், திட்டங்களில் முறைகேடுகளை ஒழித்துக்கட்டும் ஆயுதமாக ஆதார் மாறியது.

தமிழ்நாட்டில் கட்டாயம்

தமிழகத்தைப் பொறுத்த அளவில் முதலில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் 1 கோடி ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில், திட்ட பயனாளிகளின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரியாக செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாள பதிவை மேற்கொள்ளலாம் அல்லது ஆதார் ஓ.டி.பி.முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்' என்ற அறிவிப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதுபோன்ற ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? என்பது பற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சிரமம் இன்றி அதுகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், செல்போன் மாற்றம் போன்றவைகளுக்காக மக்கள் அலைகழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

அதேப் போன்று வாக்காளர் அடையாள அட்டை எண், நலத்திட்டங்களுக்கு என்று தனித்தனியாக ஆதார் இணைப்பை செயல்படுத்தாமல் அதனை ஒரே குடையின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

கார்மல் கார்த்திக்

ஈரோட்டில் ரத்த தான இயக்க ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் கார்மல் கார்த்திக் கூறியதாவது:-

தற்போது எந்த ஒரு அவசியம் என்றாலும் ஆதார் எண் முன்னிலைப்படுத்தப்படுகிறது. வங்கி இணைப்பு முதல் வாக்காளர் அட்டைவரை ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஆதார் எண் உதவியாக இருக்கும். ஆதார் மூலம் அனைத்து விவரங்களையும் கண்காணிக்க முடியும் என்பதால் நலத்திட்ட உதவிகள் சரியான மற்றும் தகுதியான நபர்களை சென்றுசேரும். எனவே ஆதார் இணைப்பு என்பது சரியானதுதான். ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், கட்டாயப்படுத்துதல் மூலமாகவும் பொதுமக்களை அச்சுறுத்தாத வகையில் எளிய முறைகளில் ஆதார் இணைப்பு என்பதை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வசந்தராஜ்

பர்கூர் மலை சோளகணை பகுதியை சேர்ந்த வசந்தராஜ் கூறியதாவது:-

ஆதார் இணைப்பு என்பது மலைக்கிராமங்கள், குக்கிராமங்களை சேர்ந்த மக்களை முழுமையாக அலைக்கழிக்கும் ஒரு அறிவிப்பாகும். எங்கள் மலைக்கிராமங்கள் பெரும்பாலும் போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. தொலைதொடர்பு வசதியும் கிடையாது. கிராமப்பகுதிகளுக்கு என்று கிராம சேவை மையங்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் தொடங்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிடங்கள் கட்டி அப்படியே வீணாக போடப்பட்டு இருக்கிறது. இப்படி வசதிகள் இல்லாத கிராமங்கள் முழுமையாக வசதிகள் பெறச்செய்ய வேண்டும். அதை விடுத்து நலத்திட்டங்கள் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மலைக்கிராம மக்கள் குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் இதற்காக நகர்ப்பகுதிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய அவலம் ஏற்படும். கிராமங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு இதுபோன்ற கட்டாய அறிவிப்புகளை அரசும் , அதிகாரிகளும் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.கே.முருகன்

ஈரோடு மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சி.கே.முருகன் கூறியதாவது:-

அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற ஆதார் கட்டாயம் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி இணைப்பதனால் என்ன பயன் என்றோ, ஏன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றோ சாதாரண மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுவதில்லை. ஆதார் எண்ணை ஒவ்வொரு திட்டத்துக்கும் இணைப்பதன் நோக்கம் என்ன என்று இதுவரை எந்த துறையும், அதன் அதிகாரிகளும் தெளிவுப்படுத்தவில்லை. அரசு சொல்கிறதே என்று எதை சொன்னாலும் மக்கள் வரிசையில் நின்று வதைபடுவதை விட வேறு என்ன நடந்திருக்கிறது. எதற்கு எடுத்தாலும் ஆதார் இணைப்பு என்பது, தனிமனித ரகசியங்களை திருடும் முயற்சியா என்று கூட சந்தேகமும் எழுகிறது.

சிறிய அளவிலான ஒரு நலத்திட்ட உதவியை வழங்க ஆதார் கட்டாயம் என்று கூறும் மத்திய-மாநில அரசுகள், அதன் அடிப்படையில் ஒருவர் நலத்திட்ட உதவி பெற தகுதியானவரா? என்று கண்காணிக்கின்றன என்றால், பெரு நிறுவனங்களுக்கு மட்டும் எந்த அடிப்படையில் கடன், கடன் தள்ளுபடி என்று சலுகைகளை அறிவிக்கிறார்கள் என்பதே எங்கள் கேள்வியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கவுன்சிலர் அருள்சாமி

ஆசனூரை சேர்ந்த தாளவாடி ஒன்றிய கவுன்சிலர் அருள்சாமி கூறியதாவது:-

மலைக்கிராமங்களில் ஆதார் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான அட்டைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைக்கிராம மக்கள் எந்த தேவைக்காக அரசு அலுவலகங்கள் செல்வதாக இருந்தாலும் பல நாட்கள் வீணாகிறது. எனவே மலைக்கிராமங்களில் வீடுகள் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, அனைத்து வகை அட்டைகளும் கிடைக்கச்செய்ய வேண்டும். ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால், இந்த மக்கள் எத்தனை தூரம் செல்ல வேண்டும். இதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள் என்பதை அதிகாரிகள் உணர்ந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் அட்டை பெறவே கடும் அலைச்சல் உள்ளது. அதை ஆன்லைன் மூலம் இணைப்பது என்றால் தொலைத்தொடர்பு வசதி இல்லாத கிராமங்களை சேர்ந்த மக்கள் என்ன செய்ய முடியும். அடிப்படை வசதிகளை முதலில் செய்து கொடுத்து விட்டு கட்டாய திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பதஅனைத்து நலத்திட்டங்கள் மானியங்கள் பெற கட்டாயம் என அறிவிப்பு; ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?அனைத்து நலத்திட்டங்கள் மானியங்கள் பெற கட்டாயம் என அறிவிப்பு; ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?லைவி என்.சந்திரா

ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த குடும்ப தலைவி என்.சந்திரா கூறியதாவது:-

நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண் இணைப்பு என்பது சரியானதுதான். ஆதார் எண்ணில் தனி மனித விவரங்கள் மட்டுமின்றி, வங்கி, ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களும் இணைக்கப்பட்டு இருப்பதால், ஒரு உதவிக்காக விண்ணப்பிக்கும்போது அவர் அதற்கு தகுதியானவர்தானா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதனால் நலத்திட்டங்கள் சரியானவர்களுக்கு சென்று சேரும். எனவே ஆதார் இணைப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story