அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை


அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:46 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் செல்லம் (வயது 58). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றாா். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர் செல்லத்தின் வீட்டின் எதிரே உள்ள சதாசிவம் மகன் சின்னராஜ் (54) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் சின்னராஜ் வீட்டின் அருகில் உள்ள கந்தசாமி மனைவி அன்னபாக்கியம் (70) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்தனர்.

வலைவீச்சு

இதையடுத்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த அன்னபாக்கியத்தின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த அன்னபாக்கியம் நகையை தனது கைகளால் பிடித்து கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார். இருப்பினும் மர்மநபர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி மர்மநபர்கள் கையில் சிக்கியது. இதையடுத்து அந்த நகையுடன் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story