ஒரே நாளில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை


ஒரே நாளில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
x

திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே நெடுமுடியான் கிராமம் தாமரைக்குளம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60), அதே ஊரில் உள்ள மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (36). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். இந்த நிலையில் 11.30 மணி அளவில் ஏழுமலை தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடை்ந்த அவர் வீட்டுக்குள் சென்றார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த மர்மநபர் ஏழுமலையை கீழே தள்ளிவிட்டு விட்டு அருகில் உள்ள வயல்வெளி வழியாக தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஏழுமலை தனது வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோவை அந்த மர்மநபர் உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

வலைவீச்சு

இதேபோல் ராஜகண்ணு என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அங்கிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். திருக்கோவிலூர் பகுதியில் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதை தவிர்க்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story