போக்சோ வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை


போக்சோ வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
x

போக்சோ வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை செய்த 2 பேருக்கு போக்சோ வழக்கில் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மாஞ்சாங்காடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் பிரசாத் என்கிற பாண்டிதுரை(வயது 32). இவர்,

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி குளிக்கச் சென்ற 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தார். பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து பிரசாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

பலாத்காரம் செய்ய முயற்சி

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள திருப்பழனம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் அய்யப்பன்(30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி இரவு நேரத்தில் 9 வயது சிறுமியை கொல்லைப்பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததுடன் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

குழு பணம் செலுத்துவதற்காக வெளியே சென்று இருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து கொல்லைப்பகுதிக்கு வந்தபோது சிறுமியை பாலத்காரம் செய்ய முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியை அழைத்து நடந்த விவரத்தை கேட்டறிந்த பெற்றோர், இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

7 ஆண்டுகள் சிறை

அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தார். பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து அய்யப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த 2 வழக்குகளிலும் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story